நேரே என்னை நோக்கி வந்தவள், "நடிக்காதடா.. நடிக்காதடா.." என்றவாறு என்
கன்னத்தில் 'சப்.. சப்..' என்று அறைய ஆரம்பித்தாள். நான் இரண்டுகையாளும்
அவள் அடிப்பதை தடுக்க முயன்றேன். ஆனால் அவள் அறைவதை நிறுத்தவில்லை. நான்
என் முகத்தை மூடிக்கொள்ள, மீனு என் முதுகிலும் ரெண்டு அடி போட்டாள்.
ரவிதான் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு, ஆத்திரத்துடன் இருந்தஅவளை பிடித்து
தடுத்தான்.
"ஐயோ...!! விடு மீனு... என்ன இது சின்னப் பசங்க மாதிரி..."
ரவி தடுத்ததும் மீனு சற்று அடங்கினாள். இப்போது நான் அவளை ஏறிட்டு
பார்த்தேன். முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு அவளிடம் கேட்டேன்.
"இப்போ எதுக்கு என்னை தேவையில்லாம அறையுற..? நான் என்ன தப்பு செஞ்சேன்..?"
"செய்றதெல்லாம் செஞ்சுட்டு ஒன்னுந்தெரியாதவன் மாதிரி நடிக்காத.. எனக்கு
அப்படியே பத்திக்கிட்டு வருது.." மீனு கோபம் கொஞ்சமும் குறையாமல்
சொன்னாள்.
"அதான் என்ன செஞ்சேன்னு கேக்குறேன்ல..?"
"பேசாத.. அப்படியே.. உன்னை அறைஞ்சே கொன்னுருவேன்.."
"அப்பப்பா.. என்ன நடக்குது இங்க..? மீனு.. எதுக்கு இப்போ இப்படி எமோஷனல்
ஆற..? அப்படி என்ன செஞ்சான் இவன்..?"ரவி பொறுமையில்லாமல் மீனுவை
கேட்கவும், அவளது முகம் அப்படியே மாறிப் போனது. அவளது கருவிழிகள் கலங்க
ஆரம்பித்தன. மூக்கு லேசாக விசும்பியது. உதடுகள் துடிக்க ஆரம்பித்தன.
பற்களால் உதடுகளை அழுத்தி கடித்துக் கொண்டாள்.
"சொல்லு மீனு.. கேக்குறேன்ல..?" ரவி திரும்ப கேட்கவும்,
"கொஞ்ச நாளா இவன் என்னை அவாய்ட்பண்ணிக்கிட்டே இருக்கான்டா.. என்கூட சரியா
பேசுறதில்லை.. நான் இப்படி வந்தா, இவன் அப்படி போறான்.. மொபைலுக்கு போன்
பண்ணுனா எடுக்குறதே இல்லை.. 'ஸாரி இட் வாஸ் இன் சைலன்ட் மோட்' ன்னு
சாவகாசமா மெசேஜ் பண்ணுறான்.. இவன் மூஞ்சிய ஒழுங்கா பாத்தே ஒரு மாசமாகப்
போவுது.. இதுலாம் பத்தாம.. இன்னைக்கு இவன் பண்ணுன காரியத்துக்கு.." மீனு
கோபத்தை அடக்கமுடியாமல் சற்று நிறுத்தினாள்.
"சொல்லு மீனு.. இன்னைக்கு என்ன பண்ணுனான்..?" ரவி மீனுவை கேட்டான்.
"நான்லாம் ஒன்னும் பண்ணலை.." என்று நான் பலவீனமாக சொன்னேன்.
"பேசாத.. உன்னை..." என்று மீனு மறுபடியும் என்னை அறைய கை ஓங்கினாள்.
ரவிதான் மறுபடியும் தடுத்தான்.
"ஏய்.. நீ சும்மா இருடா.. அவதான் பேசிக்கிட்டு இருக்கால்ல..?" ரவி என்னை
அதட்டினான்.
"நீ சொல்லு மீனு..." என்று அவளை கேட்டான்.
"மொபைல் எடுக்க மாட்டேன்றானேன்னு இன்னைக்கு இவன் ஆபீஸ் நம்பருக்கு போன்
பண்ணுனேன்.. ஒரு பொண்ணு எடுத்தா..இவரு இருந்துக்குட்டே.. இல்லைன்னு சொல்ல
சொல்லி போனை வைக்க சொல்றாரு.. பெரிய புடுங்கி இவரு.. நம்மகிட்டலாம் பேச
மாட்டாரு.."
"நான் அப்படிலாம் சொல்லலை"
நான் சொல்லி முடிக்கும் முன்பே"படார்.. படார்.." என்று என் தலையில் அடி
விழ ஆரம்பித்தது."பொய் சொல்லாத.. பொய் சொல்லாத.." என்றவாறு மீனு என்
பிடரியிலே அடித்தாள்.
"நீ சொன்னதுதான் ஈயத்தை காய்ச்சி ஊத்துன மாதிரி என் காதுல விழுந்துச்சே..
அதான் அவ சொல்றதுக்கு முன்னால நானே கட் பண்ணிட்டேன்.."
நான் அதற்கு மேலும் நடிப்பதில் அர்த்தமில்லை என்று அமைதியானேன். ரவி
எதையும் நம்பமுடியாமல் அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தான். கண்ணன்
அறைக்குள் இருந்து தலையை நீட்டி, நடப்பதை வேடிக்கைபார்த்துக்
கொண்டிருந்தான். மீனு அடிப்பதை நிறுத்திவிட்டு அழ ஆரம்பித்தாள். அவளது
பளிங்குகண்களில் இருந்து முத்து முத்தாய் கண்ணீர் துளிகள் கிளம்பி,
கன்னம் நனைத்து ஓட ஆரம்பித்தன. அவ்வப்போது மூக்கை உறிஞ்சி விசும்பினாள்.
நான் தொப்பென்று அருகில் இருந்த சேரில் உட்கார்ந்தேன்.
"ஏண்டா அசோக் இப்படிலாம் பண்ணுற..? சொல்லுடா... கேக்குறேன்ல...?" ரவி
என்னை கொஞ்சம் அதட்டி கேட்டான்.
"ஒன்னும் இல்லைடா.. எல்லாம் சும்மாதான்..." என்றேன் நான் என்ன
சொல்வதென்று புரியாமல்.
மீனு திரும்பி என்னை முறைத்தாள். ரவி சூழ்நிலையை சுமுகமாக்கும்
நோக்கத்தோடு சொன்னான்.
"சரி மீனு.. அவன் எதுக்கோ அப்படி பண்ணிட்டான்... இனிமே அப்படிலாம் பண்ண
மாட்டான்.. விடு... நீ தேவையில்லாம எமொஷனலாகாத.."மீனு தன் கண்களை
துடைத்துக்கொண்டாள். லேசாக மூக்கை உறிஞ்சிக் கொண்டாள். மெல்ல நடந்து என்
அருகில் வந்தாள். குனிந்திருந்த என் முகத்தை அவளுடைய வலது கையால்
பிடித்து நிமிர்த்தினாள்.
"சரி.. வா.. போலாம்.." என்றாள் சாந்தமாக.
"எங்கே..?" நான் புரியாமல் கேட்டேன்.
"வான்னு சொன்னா வா.. கெளம்பு..." அவள் குரலில் கோபம் அதிகரித்தது.
"எனக்கு வேலை இருக்கு.."
நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே என் கன்னத்தில் மீனு "பளார்" என்று
அறைந்தாள். ரவி ஓடிவந்து தடுத்தான்.
"என்ன மீனு..? இப்போதான சொன்னேன்..?" என்றான்.
"அவனை ஒழுங்கா என் கூட வர சொல்லு ரவி.. இல்லைனா நான் என்ன பன்னுவேன்னே
எனக்கே தெரியாது.." மீனு ஆத்திரத்துடன் சொன்னாள்.
ரவி இப்போது என்பக்கமாக திரும்பினான்.
"ஏய்... எழுந்திரிடா.. கெளம்பு.. அவகூட போ.. போடா.. போய் ரெண்டு பேரும்
மனசு விட்டு பேசுங்க.. இப்படி மனசுல இருக்குறதை சொல்லாம வச்சிக்கிட்டு..
எங்க உசுர வாங்காதீங்க..." ரவி எரிச்சலுடன் சொல்லியவாறு
என்னைகிளப்பிவிட்டான்.
"நீ நட மீனு.. அவன் வருவான்..." என்று மீனுவை பார்த்து சொன்னான்.
மீனு மறுபடியும் ஒரு முறை என்னைமுறைத்து பார்த்துவிட்டு, வாசலை நோக்கி
நடக்க ஆரம்பித்தாள். வேறு வழியில்லாமல் நானும் அவள் பின்னால் நடக்க
ஆரம்பித்தேன். வெளியில் வந்த மீனு அங்கு நிறுத்தியிருந்த அவளது
ஸ்கூட்டியில் ஏறி அமர்ந்தாள். ஸ்டார்ட் செய்தாள். நான் அருகில்
சென்றதும்,
"ம்ம்.. உக்காரு.." என்றாள். நான் அமைதியாக பின் சீட்டில் அமர்ந்தேன்.
"இப்போ எங்க போறோம்..?" என்றேன் நான்.
"வாயை மூடிக்கிட்டு கம்முனு வா..." என்றாள் மீனு, கோபம் கொப்பளிக்கும் குரலில்.
சாலையில் ட்ராபிக் குறைவாகவே இருந்தது. சர்தார் படேல் ரோட்டில் ஏறியதும்,
மீனு வண்டியை விரட்டினாள்.
No comments:
Post a Comment