என்னுடைய ஆபீஸ். காலை பதினோரு மணி இருக்கும்.
நான் அந்த கட்டிட வரைபடத்தின் அளவுகளை ஸ்கேல் வைத்து சரி பார்த்துக்
கொண்டிருந்தேன். டேபிளில் இருந்த டெலிபோன் 'கிரர்ர்ர்ர்...
கிரர்ர்ர்ர்...' என கிணுகிணுத்தது. அருகிலிருந்த கீதா ரிசீவரை எடுத்து
பேச, நான் அவளை ஓரக்கண்ணால் பார்த்தேன். பேசிய கீதா ரிசீவரின்வாயை
மூடியபடி என்னிடம் நீட்டினாள்.
"உனக்குத்தான்..." என்றாள்.
"யாரு...?"
"மீனலோசனி.."
என் இதயத்துடிப்பு பட்டென்று எகிற ஆரம்பித்தது. ஆபீஸ்நம்பருக்கேகால்
செய்ய ஆரம்பித்து விட்டாளா? இப்போது என்ன செய்வது..? நான் ஒரு
இரண்டுவினாடிதான் யோசித்திருப்பேன்.
"நான் இல்லைன்னு சொல்லி வச்சிரு.." என்றேன்.
கீதா என்னை வித்தியாசமாக ஒரு பார்வை பார்த்தாள். பின்பு மெதுவாக ரிசீவரை
தன் காதுக்கு கொண்டு சென்றாள். ஒரு வினாடி காதில் வைத்திருந்தவள்
திரும்பரிசீவரை அதனிடத்தில் வைத்தாள்.
"என்னாச்சு...?" நான் புரியாமல் கேட்டேன்.
"அவங்களே கட் பண்ணிட்டாங்க.." சொல்லிவிட்டு கீதா அவள் வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.
எனக்கு மனதில் எதுவோ உறுத்தியது. மனசு இப்போது மிகவும் பாரமாக இருந்தது.
ஏன் இப்படி எல்லாம் செய்கிறேன். எதற்காக இந்த திருட்டுத்தனம். நான்
செய்வது சரியா.. தவறா.. மனதில் எழும்பியகேள்விகள் என்னை குழப்பமடையச்
செய்தன. நான் மனம் ஒன்றாமலே மறுபடியும் என் பார்வையை வரை படத்தின்
மேல்வீசினேன்.மீனு என்கிற மீனலோசனியை பற்றி தெரிந்து கொள்ளுமுன் என்னைப்
பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள். என் பெயர் அசோக். டிப்ளமோ சிவில்
படித்திருக்கிறேன். ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில் ட்ராப்ட்ஸ்மேனாக வேலை
பார்க்கிறேன். சொந்த ஊர் சேலத்துக்கு பக்கம். கிண்டியில் ஒரு வாடகை
வீட்டில் மகேஷ், ரவி, கண்ணன் எனும் இன்னும் மூன்று நண்பர்களோடு
வசிக்கிறேன்.
சென்னைக்கு வரும் முன்னர் அவர்கள் எனக்கு பழக்கமில்லை. சென்னை வந்த
புதிதில் திருவல்லிக்கேணி மேன்ஷனில் எங்களுக்குள் நட்பு ஏற்பட்டது.
பின்பு நாங்களே தனியாக வீடு எடுத்து தங்கி எங்கள் நட்பை நீட்டித்துக்
கொண்டோம். நான்தான் சின்ன கம்பெனியில் சின்ன வேலையில் இருக்கிறேன்.
அவர்கள் மூவரும் ஒரு பெரிய சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கிறார்கள்.
கன்னாபின்னாவென்று சம்பாதிக்கிறார்கள்.
இந்த மீனு அதே கம்பெனியில் அவர்களை விட அதிக சம்பளம் வாங்குகிறாள்.
மாதமானால் சுளையாக ஐம்பதாயிரத்துக்கு மேல் பார்க்கிறாள். என்
நண்பர்களுடன் சேர்ந்து எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வருவாள். எங்களுடன்
கேரம் விளையாடுவாள். டிவி பார்ப்பாள். சினிமாவுக்கு வருவாள். சிரிப்பாள்.
சண்டை போடுவாள். எப்போதும் முகத்தில் புன்னகையுடன் பேசுவாள். கோபம்
வந்தால், அழகாக கண்களை உருட்டி முறைப்பாள். இப்போது கொஞ்ச நாளாக என்னை
காதலிக்க ஆரம்பித்து இருக்கிறாள்.
அவள் வாய்விட்டு என்னிடம் 'ஐ லவ் யூ' சொல்லாவிட்டாலும் என்னால்யூகிக்க
முடிந்திருந்தது. நான் கொஞ்ச நாளாக அவளை அவாய்ட் பண்ணுவதற்கும் அதுதான்
காரணம். அவளை பிடிக்காதா என்று கேட்கிறீர்களா? இந்த உலகத்திலேயே
அவளைத்தான் எனக்குரொம்ப பிடிக்கும். பின்பு ஏன் அவாய்ட் பண்ணுகிறேன்
என்று கேட்கிறீர்களா? தொடர்ந்து படியுங்கள்.
மீனலோசனி மிக அழகாக இருப்பாள். 'மிக அழகு' என்றால் நான்
பார்த்தபெண்களிலேயே மிக அழகு. சந்தனத்தையும் ரோஜாவையும் கலந்து பூசியது
போல ஒரு நிறம். பவுர்ணமி நிலவுக்கு பவுடர் போட்டு விட்டது போல ஒரு முகம்.
பளிங்கில் செய்த கோலி குண்டுகள் போல உருளும் இரண்டு விழிகள். ஆரஞ்சு
சுளைகளில் தேனைஊற்றியது போல இரு இதழ்கள். கோவில் சிற்பத்துக்கு புடவை
கட்டிவிட்டது போல ஒரு தேகம். வானத்தில் இருந்து குதித்த தேவதை மாதிரி ஒரு
மீனலோசனி.
இன்னும் கேளுங்கள். அழகு மட்டும் இல்லை. நிறைய படித்திருக்கிறாள்.
வசதியான வீட்டுப் பெண். எக்கச்சக்க சொத்துக்கு ஒரே வாரிசு. ஆனால் தான்
பெரிய பணக்காரிஎன்ற திமிர் துளியளவும் அவளிடம் இராது. அவளிடம் குறை என்று
என்னால் ஒன்றை கூட சுட்டிக் காட்ட முடியவில்லை. நான் அவளை அவாய்ட்
பண்ணுவதற்கு இதுதான் காரணம். ஒன்றுமே இல்லாத நான் எங்கே? எல்லாம்
நிறைந்து இருக்கிற அவள் எங்கே?
மீனுவின் நினைவுகள் என்னை வேலையில் கவனத்தை செலுத்தவிடாமல் இம்சை செய்தன.
தவறு செய்ய வைத்தன. வேலையில் ஈடுபாடு இல்லாததால் அன்று சீக்கிரமே
வீட்டுக்கு கிளம்பி விட்டேன். வீட்டை அடையும்போது மணி ஆறு ஆகப் போனது.
வீட்டை நெருங்கிய போதுதான் அன்று இந்தியா கிரிக்கெட் மேட்ச் என்று ஞாபகம்
வந்தது. இந்நேரம் முடிந்திருக்கும். ரிசல்ட் தெரியவில்லை.
"மச்சான்... மேட்ச் என்னாச்சுடா...?" என்று நான் உற்சாகமாக
கத்திக்கொண்டேதான் கதவை திறந்தேன்.கதவை திறந்ததும், ரவியுடன் எதிரே
உட்கார்ந்து கேரம் ஆடிக் கொண்டிருந்த மீனுவை பார்த்ததும் நான் அப்படியே
ஆஃப் ஆனேன். அமைதியாக தலையை குனிந்தபடி என் அறையை நோக்கிநடக்க
ஆரம்பித்தேன். மீனு ஓரக்கண்ணால் என்னையே பார்ப்பதை என்னால் உணர
முடிந்தது. அறைக்குள் நுழைந்தேன்.கண்ணன் கட்டிலில் அமர்ந்து எதோ ஒரு
புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தான். மகேஷ் இன்னும் வரவில்லை
போலிருக்கிறது. நான் என் பேக்கைஅறையில் வைத்துவிட்டு பாத்ரூமுக்குள்
புகுந்து கொண்டேன். முகம் கழுவிக்கொண்டு வெளியே வந்தேன். தலை வாரிக்
கொண்டேன். மீண்டும் மெல்ல நடந்து வாசலுக்கு சென்றேன். செருப்பு மாட்டிக்
கொண்டு, "ரவி.. எனக்கு வெளியில கொஞ்சம் வேலை இருக்குடா.. போயிட்டு
வர்றேன்.." என்று நான் சொல்லி முடிக்கும் முன்னே,
"இப்போ ஒருத்தனுக்கு செருப்படிவிழப் போவுது.."
என்று பின்னால் இருந்து மீனு சொல்ல, நான் திரும்பி பார்த்தேன். அவள்
என்னைத்தான் சொல்கிறாள் என்று எனக்கு நன்றாக புரிந்தது. ஆனாலும் எதுவும்
புரியாதவன் மாதிரி அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டேன்.
"யாருக்கு மீனு செருப்படி விழப் போவுது..?"
"ம்ம்ம்ம்... எதுவும் புரியாதவன்மாதிரி நடிக்கிறான் பாத்தியா..
அவனுக்கு.." என்று என்னை முறைத்தபடி சொன்னாள்.
"எ....என்ன சொல்ற மீனு..? எ....எனக்குஎதுவும் புரியலை.."
அவ்வளவுதான்.. மீனு பட்டெனசேரில் இருந்து எழுந்தாள்.
No comments:
Post a Comment